சுவிசேஷத்தில் சம்பாத்தியம்

தம்பி: என்னண்ணே எப்படி இருக்கீங்க?


அண்: நான் நல்லா இருக்கேன் தம்பி, கையில என்னப்பா?


தம்பி: கிறிஸ்டியன் மெஸேஜ் சீடியும், சாங் சீடியும் வாங்கிட்டுப்போறேண்ணே. வீட்டுல நேரம் கிடைக்கும் போது போட்டு கேட்கலாமேன்னுதான்.


அண்: இதெல்லாம் காசு கொடுத்தாப்பா வாங்கினே?


தம்பி: என்னண்ணே இப்படி கேட்குறீங்க? அப்புறம் என்ன ஓசின்னா நினைச்சீங்க? இந்த மாதிரி நல்ல சீடியெல்லாம் காசுக்கு விக்கிறதுல என்னண்ணே தப்பு?


அண்: இயேசு சீஷர்களிடத்தில், “பரலோகராஜ்யம் சமீபித்திருக்கிறது என்று பிரசங்கியுங்கள், வியாதிகளைச் சொஸ்தமாக்குங்கள், குஷ்டரோகிகளைச் சுத்தம்பண்ணுங்கள், மரித்தோரை எழுப்புங்கள், பிசாசுகளைத் துரத்துங்கள், இலவசமாய்ப் பெற்றீர்கள் இலவசமாய்க் கொடுங்கள்”ன்னு மத்தேயு:10:8ல சொல்றாருல்லப்பா?


தம்பி: இந்த பணத்த வைத்து ஊழியங்களைத் தாங்கலாம் பிறகு ஏழைகளுக்கும் உதவலாம்லண்ணே. அதனால ஓசீல கொடுக்கமுடியாதுல்லண்ணே.


அண்: ஊழியங்களுக்கும் ஏழைகளுக்கும் உதவணும், ஆனா அதுக்காக தேவன் கொடுத்த தாலந்துகளை விற்று இதெல்லாம் செய்யக்கூடாதுன்னு சொன்னேன். இப்படித்தான் தேவனுக்காக பாடுகிற பாடல்கள், கர்த்தரின் வார்த்தையாகிய பைபுள் இவைகளையெல்லாம் காசுகொடுத்துதான் வாங்க வேண்டிய அவல நிலை உள்ளது.


தம்பி: இதெல்லாம் காசு கொடுத்துதானண்ணே இவுங்களும் ரெடிபண்றாங்க. போட்ட காச எடுக்கவாவது பணம் வாங்கித்தானண்ணே ஆகணும்.


அண்: பவுல் 2.தெசலோனிக்கியர் 3:8 ல “ஒருவனிடத்திலும் இலவசமாய்ச் சாப்பிடாமலும், உங்களில் ஒருவனுக்கும் பாரமாயிராதபடிக்கு இரவும் பகலும் பிரயாசத்தோடும் வருத்தத்தோடும் வேலைசெய்து சாப்பிட்டோம்”ன்னு சொல்றார். பவுல் தேவனுடைய தாலந்துகளைக் கொண்டு அதின்மூலமாக சம்பாதிக்காமல் வேலைசெய்துதான் சம்பாதித்தார். அதற்காக அவர் இரவும் பகலும் கஷ்டப்படவேண்டியிருந்தது. அதுபோல உழைச்சி சம்பாதிச்சுதான் இந்த செலவையெல்லாம் பார்த்துக்கணுமே தவிர சுவிசேஷத்தை சம்பாத்தியமாக்க கூடாது.


தம்பி: இப்ப புரிஞ்சுதுண்ணே, சுவிசேஷம் இலவசம்னு.


அண்: ரொம்ப சந்தோஷம் தம்பி, கடவுள் சித்தமான அப்புறம் சந்திக்கலாம்.


இந்தக் கதையில் தவறிருந்தால் நான் திருத்திக்கொள்கிறேன். இல்லையேல், கதையின்படி நாம் திருந்திக்கொள்வோம்.

Book your tickets